கூடுகிறார்கள்.. கொண்டாடுகிறார்கள்..
சீனியர்னா ஒரு சிங்கம், புலி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து நம் முதலாமாண்டு மாணவர்களை மிரட்டி வைத்திருக்கிறார்கள், பல கல்லூரிகளில். இப்படியே உசுப்பேத்தி சும்மா இருக்கும் சீனியரையும் சுரண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதை நிறுத்திவிட்டாலே கல்லூரிகளில் ராகிங் பாதி குறைந்துவிடும். அந்த கல்லுக்குள் இருக்கும் ஈரத்தை உணரச்செய்யவும், சீனியர்-ஜூனியர் மத்தியில் ஒரு ஆரோக்கியமான உறவுப்பாலம் அமைக்கவும் வந்துவிட்டது “கல்லூரிச்சாலை- கூடுவோம்.. கொண்டாடுவோம்..”.
இளைஞர்களின் இதயத்துடிப்பாய் இருக்கும் நம் புதிய தலைமுறையும், தமிழகத்தின் நெ.1 ரேடியோவான ரேடியோ ஹலோ 106.4 ம் இணைந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, புதுச்சேரி, ஆகிய ஏழு இடங்களில் கிட்டத்தட்ட 70 கல்லூரிகளில் இந்த நிகழ்வினை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். செல்லுமிடமெல்லாம் சிறப்பான வரவேற்பை பெற்று வரும் இந்நிகழ்ச்சியைப் பற்றிய ஒரு ஸ்பாட் ரிப்போர்டிற்காக, திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரிக்கு பயணப்பட்டோம்.
ஆங்காங்கே வரவேற்பு பேனர்கள் பளிச்சிட, மாணவர்களும் உற்சாகமாய் காணப்பட்டனர். இந்த கல்லூரியில் இப்படி நடத்தப்படும் முதல் நிகழ்ச்சி இது என்பதால் மாணவர்கள் எதிர்பார்ப்போடும், மகிழ்ச்சியோடும் காத்திருந்தனர். பொதுவாக அரசுக் கல்லூரிகளிலும், அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் இது மாதிரியான கலை நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்பதுப் போன்ற குற்றச்சாட்டு நிலவுவதை உணர்ந்ததால், நம் நிகழ்ச்சிக்காக கல்லூரிகளை தேர்ந்தெடுப்பதிலும் கவனத்தோடு செயல்பட்டுள்ளனர், ஹலோ எஃப்.எம். குழுவினர். ஹலோ அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி ஆரம்பித்தபோது தொடங்கிய ஆரவாரம், நிகழ்ச்சி முடியும்வரை ஓயவேயில்லை. மொத்தம் மூன்று போட்டிகள் நடத்தப்பட்டன.
முதல் போட்டி, “புதிய தலைமுறையே வருக!”. இது தம்ப்-சி எனப்படும் மெளன மொழி போட்டிதான். நம் தாத்தா காலத்திலிருந்து விளையாடப்பட்டு வரும் விளையாட்டாக இருந்தாலும், இம்முறை போட்டியில் ஒரு புதுமை இருந்தது. இந்தப் போட்டியில் இரண்டு பேர் சேர்ந்து ஒரு அணியாக விளையாட வேண்டும். அணியில் ஒருவர் கட்டாயம் முதலாண்டு மாணவராகவும், மற்றொருவர் இரண்டாவது அல்லது மூன்றாமாண்டு மாணவராகவும் இருத்தல் வேண்டும். பலரும் ஸ்பாட்டிலேயே தங்கள் ஜோடியைத் தேர்ந்தெடுத்தார்கள். அதுவும்கூட பெயரே தெரியாத ஜூனியர்களை அன்பாக கட்டளையிட்டு ஒவ்வொரு சீனியரும் அழைத்து வந்தது, நல்ல காட்சியாக இருந்தது. சில ஜூனியர்கள் சரியான பதிலை சொன்னபோது, அதே அணியைச் சேர்ந்த சீனியர்கள் அவர்களை அலேக்காக தூக்கிக் கொண்டாடியது, இந்தியக் கல்லூரி வரலாற்றிலேயே முதல்முறையாக என்று சொல்லுமளவு, நம்மைப் பெருமைப்பட வைத்தது.
இரண்டாவதாக நடைபெற்றதோ, “ஐடியா நேரம்”. இதுவும் சீனியரும், ஜூனியரும் ஒரு அணியாக விளையாட வேண்டிய விளையாட்டே ஆகும். சமூகப்பிரச்சினைகளை மாணவர்கள் முன் வைத்து அதற்கான அவர்களது கருத்துக்களையும், தீர்வுகளையும் அலசி ஆராய்வதே அந்த போட்டி. ”மிகப்பெரிய மூட நம்பிக்கை எது?” “கல்யாணத்துக்கு மாப்பிள்ளையின் குணத்தை பார்க்காமல், ஜாதகம் பார்ப்பதுதான்” “லஞ்சம் தொடங்குமிடம் எது?” “பேருந்தில் 50 பைசா மிச்சத்தை விட்டு வருகிறோமே அதுதான்” இப்படி கேள்விகளுக்கான பதில்கள், சுவாரஸ்யமாக வந்து விழுந்தன.
மூன்றாவது போட்டி, டிரஷர் ஹண்ட் எனப்படும் புதையல் வேட்டை. சில சீட்டுகளில் புதையல் இருக்கும் இடங்கள் குறித்த குறிப்புகள் கொடுக்கப்படும். அதை வைத்து நான்கு முதலாமாண்டு மாணவர்கள் உட்பட, ஏழு பேர் கொண்ட அணி அந்தப் புதையலை கண்டுபிடிக்க வேண்டும். இண்டியானா ஜோன்ஸ், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் ரேஞ்சுக்கான தேடலுக்குப் பின் புதையலை கண்டுபிடித்தார்கள் மாணவர்கள். முந்தைய இரண்டு போட்டிகளைவிட இதில் ஜூனியர்-சீனியர் வேற்றுமை முற்றிலுமாக களைந்துவிட்டதை உணர்ந்தோம்.
நிகழ்ச்சியில் சிறப்பாக பங்கேற்கும் மாணவர்களில் சிலரை “புதிய தலைமுறை ஆர்,ஜே”வாக தேர்வு செய்து ஒரு மணி நேரம் ஹலோ எஃப்.எம்.மின் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வாய்ப்பு தர இருக்கிறார்கள். நிகழ்ச்சியின் முடிவில் வெற்றி பெற்ற பதினொறு மாணவர்களுக்கும் ஒரு அழகிய மொபைல் ஃபோன் பரிசினை ஐடியா மொபைல் திருச்சியின் நிர்வாகி, புதிய தலைமுறை திருச்சியின் சர்குலேஷன் மானேஜர், ஈ.வெ.ரா.கல்லூரி முதல்வர் ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர். பரிசு பெற்றதைவிட, இது போன்ற நிகழ்ச்சி மூலம் தங்கள் திறமைகளுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பிற்கே நன்றி தெரிவித்தனர் மாணவர்கள். பின்னர் நிகழ்வில் கலந்துகொண்ட அத்தனை மாணவர்களுக்கும் புதிய தலைமுறை இதழ் வழங்கப்பட்டது.
நிறைவாக ஈ.வெ.ரா. கல்லூரியின் சீனியர்-ஜூனியரிடையே இருந்த இருக்கத்தையும், தயக்கத்தையும் நீக்கிவிட்ட மன நிறைவோடு விடைபெற்றோம். தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலும் தொடரும் இந்த கல்லூரிச்சாலையின் பயணத்தை, சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லாமல், நெகிழ்வோடு மாணவர்கள் மனதில் பதிவிப்பதில் பெருமைப் படுகிறது புதிய தலைமுறை. இதை வெற்றி நிகழ்வாக மாற்றிவரும் மாணவர்களுக்கும், நிகழ்ச்சியின் மற்ற விளம்பரதாரர்களுக்கும், நிகழ்ச்சி நடத்துனர்களான ரேடியோ ஹலோவிற்கும் புதிய தலைமுறையின் நன்றிகள்.
No comments:
Post a Comment