.jpg)
படத்துல நிறைய அடிதடி இருக்கும், ஆனா ஆக்ஷன் படம் கிடையாது. நிறைய காமெடி டிரை பண்ணியிருப்பாங்க, ஆனா இது காமெடி படமுமில்ல. அம்மா-புள்ள, காதலன் –காதலி, அப்பா-பொண்ணு அப்புடின்னு நிறைய உறவுகளின் செண்டிமெண்ட்ஸ் இருக்கும், ஆனா இது குடும்பப் படமும் கிடையாது. படம் முழுக்க எல்லாருமே கருத்து சொல்லி பாடம் நடத்துவாங்க, ஆனா இது சமூக புரட்சிக்கான படமுமில்ல. அப்ப என்னதான்யா இது? முழுநீள கலைஞர் வம்சத் திரைப்படம். ஏற்கனவே திரை உலகில் இருக்கும் அவரது வம்சத்தினர் செல்லுலாய்டில் என்ன செய்துகொண்டிருக்கிறார்களோ, அதையேத்தான் இவர்களும் செய்துள்ளனர். ஒரே ஒரு வருத்தமான வித்தியாசம், இந்த வம்சத்திடம் இதுவரை மாட்டிய டைரக்டர்கள் வளர்ந்த நிலையிலிருந்தார்கள். ஆனால் பாண்டிராஜ்தான் பாவம், ஆரம்ப நிலையிலேயே அட்டூழியம் செய்யத்தூண்டப்பட்டுள்ளார்.
ஹீரோ பேரு அன்பரசு, ஃபர்ஸ்ட் சீன் போலிஸ் ஸ்டேஷன், குட்டீஸோட லவ்வுனு பசங்க படத்தோட பார்முலாவ செண்டிமெண்டா யூஸ் பண்ணியிருக்கிறார் டைரக்டர். ஆனா ஏனோ தெரியல, இன்னைக்குத் திண்ண மசால்வடையில ஊசல் வாடை. இண்ட்ரோ சீன்ல ஹீரோ ஸ்லோ மோஷன்ல நடந்து வற்றப்ப கெத்தா இருக்கார். ஆனா தியேட்டர்ல மயான அமைதி நிலவுது. கிட்டத்தட்ட படத்தோட முக்காவாசி கதைய முதல் சீனிலேயேயே ஒரு கான்ஸ்டபிள் சொல்லிடுறார். இதை ரொம்ப லென்த் பண்ணாமல் தவிர்த்திருக்கலாம். தேவர் இனத்தப் பத்தி ஒரு பி.ஹெச்.டி. யே செஞ்சிருக்கார் பாண்டிராஜ். படம் முழுக்க இது மாதிரி ஜாதி பெயர்கள் சரமாரியாக உபயோகிக்கப்பட்டு ரொம்ப காலமாகுதுன்னு நினைக்குறேன். படத்த பார்த்துட்டு வந்தவங்கள வெறுப்பேத்தனுமா? அவங்க கிட்டப் போய், “எப்பாடு பட்டாலும் பிற்பாடு படாதவர்னு” சொல்லிப் பாருங்க. கொலைவெறி ஆகிடுவாங்க.
ஹீரோயின் சுனைனா எந்த மாதிரி ஹீரோயின்னு சத்தியமா புரியல. வெட்கப்படுறாங்க, லவ் பண்றாங்க, கோபப்படுறாங்க, சைக்கிள் செயின் சுத்துறாங்க, ஹீரோகிட்ட சவால் விடுறாங்க, நாம எதிர்பார்க்குறதத் தவிர எல்லாமே செய்யுறாங்கன்னா பாத்துக்கோங்களேன். ஆனா அவங்களும் செகண்ட் ஆஃப்ல காணாம போயிட்டு கிளைமேக்ஸ்ல இரண்டு புள்ளைங்களுக்கு அம்மாவா வர்றாங்க. எது எப்புடியோ சுனைனா தனக்குக் கொடுத்த பாத்திரத்துல பேமண்டுக்கு அதிகமாவே நடிச்சிருக்காங்க. ஹீரோயினகூட நடிக்க வச்ச டைரக்டருக்கு சபாஷ்.
காமெடி பர்ஸ்ட் ஆஃப்ல கஞ்சா கருப்பு சரவெடி. அவர் வந்தாலே கலகலக்குது தியேட்டர். பசங்க மாதிரியே வித விதமான ரிங்டோன் மூலமா கிச்சுகிச்சு மூட்ட முயற்சி செஞ்சிருக்காங்க. கிராமத்துல இருக்கக்கூடிய செல்போன் சிக்னல் பிரச்சினைய வச்சு இவ்ளோ காமெடி யோசிக்க முடியுமான்னுதான் தோணுது. இந்த காமெடிகள்தான் நமக்கு நல்ல ஆறுதல்.
பசங்க படத்தோட வாத்தியார்தான் வில்லன். செம்ம கெத்தான தோற்றம், பேச்சு. ஆனா லுச்சாத்தனமா நெறைய செய்யுறார். சமயத்துல கஞ்சா கருப்புக்கு பதில் இவர பாத்தும் சிரிப்பு வருது. ஏன்னு தெரியல. வில்லன்கள பாத்து ஹீரோ ஓடுறாரு, ஓடுறாரு நமக்கே எரிச்சல் வர்ற அளவுக்கு ஓடுறாரு. திடீர்னு அடிக்கிறாரு, சில்லி மூக்க உடைக்குறாரு, கேட்டா சில்லி மூக்கு உடைஞ்சா நல்லதுன்னு சொல்றாரு, பக்கம் பக்கமா வசனம் கொடுத்தாலும் அப்புடியே எந்த ஏற்ற இரக்கமும் இல்லாம ஒப்பிச்சுத் தள்ளுறாரு. நடிப்பு, வசனம் ,டான்ஸ் இப்புடி எதுவுமே இல்லாட்டியும், குறை சொல்ல முடியாத இயல்பான ஹீரோ தோற்றம் ஒண்ணுதான் அவரோட பிளஸ்ஸா தெரியுது. ஊமையா நடிச்சா பெரியாளாகிடலாம்னு நினைக்குறேன்.
மியூசிக் நூர். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் அசிஸ்டெண்டாம். அப்புடி எந்த அறிகுறியும் தெரியல. ஒண்ணு ரெண்டு சாங் பரவாயில்ல. பிண்ணனியில ஏதாவது டிரை பண்ணியிருக்கலாம். முக்கால்வாசி திருவிழா, ஆட்டம் பாட்டம், செல்போன் ரிங்டோன்ங்கிற பேருல இளையராஜா பாட்டுங்கள வச்சே பேக்ரவுண்ட் ஸ்கோர் செஞ்சுட்டாங்க. பெருசா மெனக்கிடல. பத்து நாள் திருவிழாவ பாதி படத்துக்கு காண்பிக்குறது, பிளாஷ்பேக்குகுள்ள பிளாஷ்பேக் வைக்குறது, எல்லா கேரக்டரும் கருத்துகள கக்கி கக்கி வாந்தியெடுக்குறதுன்னு நிறைய விஷயங்கள் சுவாரஸ்யத்த குறைச்சிடுது.
படத்துல நிறைய விஷயங்கள தெரிஞ்சுக்க முடியுது. புதுக்கோட்டை சைடு கிராமங்களோட திருவிழா, சம்பிரதாயங்கள், கருவறுத்தல், தமிழ் ஸ்லாங்னு நிறைய பதிவுகள் இருக்கு. இத நம்மோட கிராமத்துல நம்ம அக்கம் பக்கத்து வீட்டுல நடக்குற விஷயங்களா உணர முடியுதேத் தவிர, ஒரு சினிமாங்கிற அடிப்படையில ரசிக்க முடியல.
படத்துல யாரோட கேரக்டரையுமே புரிஞ்சுக்க முடியல. பேசுற வசனங்கள்ல இருக்குற நாடகத்தனமும் இதுக்கு ஒரு காரணம். மொத்தமா மாரல் சயின்ஸ் புக்க ஓபன் செஞ்சு படிச்ச மாதிரி பீல் இருக்குது. எல்லாமே படத்துல நார்மலா இருக்கும்போது, இத எக்ஸ்டிரா ஆட்னரியா இருக்கும்னு நாம எதிர்பாத்துட்டு போனா ஏமாற்றம்தான் கிடைக்கும். என்னைப் போலிருக்கும் பாண்டிராஜோட தீவிர ரசிகர்கள் படத்த பார்க்க வேணாம். அடுத்த படத்துக்காக வெயிட் பண்ணுவோம். வேற எதுவும் பரிகாரம் இருக்குறதா எனக்குத் தெரியல.
மொத்தத்தில் ”வம்சம்”- பெரிய “பசங்க”