Friday, August 13, 2010

”வம்சம்” – பெப்பரில்லா ஆஃப் பாயில்….

படத்துல நிறைய அடிதடி இருக்கும், ஆனா ஆக்‌ஷன் படம் கிடையாது. நிறைய காமெடி டிரை பண்ணியிருப்பாங்க, ஆனா இது காமெடி படமுமில்ல. அம்மா-புள்ள, காதலன் –காதலி, அப்பா-பொண்ணு அப்புடின்னு நிறைய உறவுகளின் செண்டிமெண்ட்ஸ் இருக்கும், ஆனா இது குடும்பப் படமும் கிடையாது. படம் முழுக்க எல்லாருமே கருத்து சொல்லி பாடம் நடத்துவாங்க, ஆனா இது சமூக புரட்சிக்கான படமுமில்ல. அப்ப என்னதான்யா இது? முழுநீள கலைஞர் வம்சத் திரைப்படம். ஏற்கனவே திரை உலகில் இருக்கும் அவரது வம்சத்தினர் செல்லுலாய்டில் என்ன செய்துகொண்டிருக்கிறார்களோ, அதையேத்தான் இவர்களும் செய்துள்ளனர். ஒரே ஒரு வருத்தமான வித்தியாசம், இந்த வம்சத்திடம் இதுவரை மாட்டிய டைரக்டர்கள் வளர்ந்த நிலையிலிருந்தார்கள். ஆனால் பாண்டிராஜ்தான் பாவம், ஆரம்ப நிலையிலேயே அட்டூழியம் செய்யத்தூண்டப்பட்டுள்ளார்.

ஹீரோ பேரு அன்பரசு, ஃபர்ஸ்ட் சீன் போலிஸ் ஸ்டேஷன், குட்டீஸோட லவ்வுனு பசங்க படத்தோட பார்முலாவ செண்டிமெண்டா யூஸ் பண்ணியிருக்கிறார் டைரக்டர். ஆனா ஏனோ தெரியல, இன்னைக்குத் திண்ண மசால்வடையில ஊசல் வாடை. இண்ட்ரோ சீன்ல ஹீரோ ஸ்லோ மோஷன்ல நடந்து வற்றப்ப கெத்தா இருக்கார். ஆனா தியேட்டர்ல மயான அமைதி நிலவுது. கிட்டத்தட்ட படத்தோட முக்காவாசி கதைய முதல் சீனிலேயேயே ஒரு கான்ஸ்டபிள் சொல்லிடுறார். இதை ரொம்ப லென்த் பண்ணாமல் தவிர்த்திருக்கலாம். தேவர் இனத்தப் பத்தி ஒரு பி.ஹெச்.டி. யே செஞ்சிருக்கார் பாண்டிராஜ். படம் முழுக்க இது மாதிரி ஜாதி பெயர்கள் சரமாரியாக உபயோகிக்கப்பட்டு ரொம்ப காலமாகுதுன்னு நினைக்குறேன். படத்த பார்த்துட்டு வந்தவங்கள வெறுப்பேத்தனுமா? அவங்க கிட்டப் போய், “எப்பாடு பட்டாலும் பிற்பாடு படாதவர்னு” சொல்லிப் பாருங்க. கொலைவெறி ஆகிடுவாங்க.

ஹீரோயின் சுனைனா எந்த மாதிரி ஹீரோயின்னு சத்தியமா புரியல. வெட்கப்படுறாங்க, லவ் பண்றாங்க, கோபப்படுறாங்க, சைக்கிள் செயின் சுத்துறாங்க, ஹீரோகிட்ட சவால் விடுறாங்க, நாம எதிர்பார்க்குறதத் தவிர எல்லாமே செய்யுறாங்கன்னா பாத்துக்கோங்களேன். ஆனா அவங்களும் செகண்ட் ஆஃப்ல காணாம போயிட்டு கிளைமேக்ஸ்ல இரண்டு புள்ளைங்களுக்கு அம்மாவா வர்றாங்க. எது எப்புடியோ சுனைனா தனக்குக் கொடுத்த பாத்திரத்துல பேமண்டுக்கு அதிகமாவே நடிச்சிருக்காங்க. ஹீரோயினகூட நடிக்க வச்ச டைரக்டருக்கு சபாஷ்.

காமெடி பர்ஸ்ட் ஆஃப்ல கஞ்சா கருப்பு சரவெடி. அவர் வந்தாலே கலகலக்குது தியேட்டர். பசங்க மாதிரியே வித விதமான ரிங்டோன் மூலமா கிச்சுகிச்சு மூட்ட முயற்சி செஞ்சிருக்காங்க. கிராமத்துல இருக்கக்கூடிய செல்போன் சிக்னல் பிரச்சினைய வச்சு இவ்ளோ காமெடி யோசிக்க முடியுமான்னுதான் தோணுது. இந்த காமெடிகள்தான் நமக்கு நல்ல ஆறுதல்.

பசங்க படத்தோட வாத்தியார்தான் வில்லன். செம்ம கெத்தான தோற்றம், பேச்சு. ஆனா லுச்சாத்தனமா நெறைய செய்யுறார். சமயத்துல கஞ்சா கருப்புக்கு பதில் இவர பாத்தும் சிரிப்பு வருது. ஏன்னு தெரியல. வில்லன்கள பாத்து ஹீரோ ஓடுறாரு, ஓடுறாரு நமக்கே எரிச்சல் வர்ற அளவுக்கு ஓடுறாரு. திடீர்னு அடிக்கிறாரு, சில்லி மூக்க உடைக்குறாரு, கேட்டா சில்லி மூக்கு உடைஞ்சா நல்லதுன்னு சொல்றாரு, பக்கம் பக்கமா வசனம் கொடுத்தாலும் அப்புடியே எந்த ஏற்ற இரக்கமும் இல்லாம ஒப்பிச்சுத் தள்ளுறாரு. நடிப்பு, வசனம் ,டான்ஸ் இப்புடி எதுவுமே இல்லாட்டியும், குறை சொல்ல முடியாத இயல்பான ஹீரோ தோற்றம் ஒண்ணுதான் அவரோட பிளஸ்ஸா தெரியுது. ஊமையா நடிச்சா பெரியாளாகிடலாம்னு நினைக்குறேன்.

மியூசிக் நூர். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் அசிஸ்டெண்டாம். அப்புடி எந்த அறிகுறியும் தெரியல. ஒண்ணு ரெண்டு சாங் பரவாயில்ல. பிண்ணனியில ஏதாவது டிரை பண்ணியிருக்கலாம். முக்கால்வாசி திருவிழா, ஆட்டம் பாட்டம், செல்போன் ரிங்டோன்ங்கிற பேருல இளையராஜா பாட்டுங்கள வச்சே பேக்ரவுண்ட் ஸ்கோர் செஞ்சுட்டாங்க. பெருசா மெனக்கிடல. பத்து நாள் திருவிழாவ பாதி படத்துக்கு காண்பிக்குறது, பிளாஷ்பேக்குகுள்ள பிளாஷ்பேக் வைக்குறது, எல்லா கேரக்டரும் கருத்துகள கக்கி கக்கி வாந்தியெடுக்குறதுன்னு நிறைய விஷயங்கள் சுவாரஸ்யத்த குறைச்சிடுது.

படத்துல நிறைய விஷயங்கள தெரிஞ்சுக்க முடியுது. புதுக்கோட்டை சைடு கிராமங்களோட திருவிழா, சம்பிரதாயங்கள், கருவறுத்தல், தமிழ் ஸ்லாங்னு நிறைய பதிவுகள் இருக்கு. இத நம்மோட கிராமத்துல நம்ம அக்கம் பக்கத்து வீட்டுல நடக்குற விஷயங்களா உணர முடியுதேத் தவிர, ஒரு சினிமாங்கிற அடிப்படையில ரசிக்க முடியல.

படத்துல யாரோட கேரக்டரையுமே புரிஞ்சுக்க முடியல. பேசுற வசனங்கள்ல இருக்குற நாடகத்தனமும் இதுக்கு ஒரு காரணம். மொத்தமா மாரல் சயின்ஸ் புக்க ஓபன் செஞ்சு படிச்ச மாதிரி பீல் இருக்குது. எல்லாமே படத்துல நார்மலா இருக்கும்போது, இத எக்ஸ்டிரா ஆட்னரியா இருக்கும்னு நாம எதிர்பாத்துட்டு போனா ஏமாற்றம்தான் கிடைக்கும். என்னைப் போலிருக்கும் பாண்டிராஜோட தீவிர ரசிகர்கள் படத்த பார்க்க வேணாம். அடுத்த படத்துக்காக வெயிட் பண்ணுவோம். வேற எதுவும் பரிகாரம் இருக்குறதா எனக்குத் தெரியல.

மொத்தத்தில் ”வம்சம்”- பெரிய “பசங்க”

Thursday, August 5, 2010

கல கலக்கும் கல்லூரிச்சாலை..

கூடுகிறார்கள்.. கொண்டாடுகிறார்கள்..

சீனியர்னா ஒரு சிங்கம், புலி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து நம் முதலாமாண்டு மாணவர்களை மிரட்டி வைத்திருக்கிறார்கள், பல கல்லூரிகளில். இப்படியே உசுப்பேத்தி சும்மா இருக்கும் சீனியரையும் சுரண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதை நிறுத்திவிட்டாலே கல்லூரிகளில் ராகிங் பாதி குறைந்துவிடும். அந்த கல்லுக்குள் இருக்கும் ஈரத்தை உணரச்செய்யவும், சீனியர்-ஜூனியர் மத்தியில் ஒரு ஆரோக்கியமான உறவுப்பாலம் அமைக்கவும் வந்துவிட்டது “கல்லூரிச்சாலை- கூடுவோம்.. கொண்டாடுவோம்..”.

இளைஞர்களின் இதயத்துடிப்பாய் இருக்கும் நம் புதிய தலைமுறையும், தமிழகத்தின் நெ.1 ரேடியோவான ரேடியோ ஹலோ 106.4 ம் இணைந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, புதுச்சேரி, ஆகிய ஏழு இடங்களில் கிட்டத்தட்ட 70 கல்லூரிகளில் இந்த நிகழ்வினை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். செல்லுமிடமெல்லாம் சிறப்பான வரவேற்பை பெற்று வரும் இந்நிகழ்ச்சியைப் பற்றிய ஒரு ஸ்பாட் ரிப்போர்டிற்காக, திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரிக்கு பயணப்பட்டோம்.

ஆங்காங்கே வரவேற்பு பேனர்கள் பளிச்சிட, மாணவர்களும் உற்சாகமாய் காணப்பட்டனர். இந்த கல்லூரியில் இப்படி நடத்தப்படும் முதல் நிகழ்ச்சி இது என்பதால் மாணவர்கள் எதிர்பார்ப்போடும், மகிழ்ச்சியோடும் காத்திருந்தனர். பொதுவாக அரசுக் கல்லூரிகளிலும், அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் இது மாதிரியான கலை நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்பதுப் போன்ற குற்றச்சாட்டு நிலவுவதை உணர்ந்ததால், நம் நிகழ்ச்சிக்காக கல்லூரிகளை தேர்ந்தெடுப்பதிலும் கவனத்தோடு செயல்பட்டுள்ளனர், ஹலோ எஃப்.எம். குழுவினர். ஹலோ அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி ஆரம்பித்தபோது தொடங்கிய ஆரவாரம், நிகழ்ச்சி முடியும்வரை ஓயவேயில்லை. மொத்தம் மூன்று போட்டிகள் நடத்தப்பட்டன.

முதல் போட்டி, “புதிய தலைமுறையே வருக!”. இது தம்ப்-சி எனப்படும் மெளன மொழி போட்டிதான். நம் தாத்தா காலத்திலிருந்து விளையாடப்பட்டு வரும் விளையாட்டாக இருந்தாலும், இம்முறை போட்டியில் ஒரு புதுமை இருந்தது. இந்தப் போட்டியில் இரண்டு பேர் சேர்ந்து ஒரு அணியாக விளையாட வேண்டும். அணியில் ஒருவர் கட்டாயம் முதலாண்டு மாணவராகவும், மற்றொருவர் இரண்டாவது அல்லது மூன்றாமாண்டு மாணவராகவும் இருத்தல் வேண்டும். பலரும் ஸ்பாட்டிலேயே தங்கள் ஜோடியைத் தேர்ந்தெடுத்தார்கள். அதுவும்கூட பெயரே தெரியாத ஜூனியர்களை அன்பாக கட்டளையிட்டு ஒவ்வொரு சீனியரும் அழைத்து வந்தது, நல்ல காட்சியாக இருந்தது. சில ஜூனியர்கள் சரியான பதிலை சொன்னபோது, அதே அணியைச் சேர்ந்த சீனியர்கள் அவர்களை அலேக்காக தூக்கிக் கொண்டாடியது, இந்தியக் கல்லூரி வரலாற்றிலேயே முதல்முறையாக என்று சொல்லுமளவு, நம்மைப் பெருமைப்பட வைத்தது.

இரண்டாவதாக நடைபெற்றதோ, “ஐடியா நேரம்”. இதுவும் சீனியரும், ஜூனியரும் ஒரு அணியாக விளையாட வேண்டிய விளையாட்டே ஆகும். சமூகப்பிரச்சினைகளை மாணவர்கள் முன் வைத்து அதற்கான அவர்களது கருத்துக்களையும், தீர்வுகளையும் அலசி ஆராய்வதே அந்த போட்டி. ”மிகப்பெரிய மூட நம்பிக்கை எது?” “கல்யாணத்துக்கு மாப்பிள்ளையின் குணத்தை பார்க்காமல், ஜாதகம் பார்ப்பதுதான்” “லஞ்சம் தொடங்குமிடம் எது?” “பேருந்தில் 50 பைசா மிச்சத்தை விட்டு வருகிறோமே அதுதான்” இப்படி கேள்விகளுக்கான பதில்கள், சுவாரஸ்யமாக வந்து விழுந்தன.

மூன்றாவது போட்டி, டிரஷர் ஹண்ட் எனப்படும் புதையல் வேட்டை. சில சீட்டுகளில் புதையல் இருக்கும் இடங்கள் குறித்த குறிப்புகள் கொடுக்கப்படும். அதை வைத்து நான்கு முதலாமாண்டு மாணவர்கள் உட்பட, ஏழு பேர் கொண்ட அணி அந்தப் புதையலை கண்டுபிடிக்க வேண்டும். இண்டியானா ஜோன்ஸ், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் ரேஞ்சுக்கான தேடலுக்குப் பின் புதையலை கண்டுபிடித்தார்கள் மாணவர்கள். முந்தைய இரண்டு போட்டிகளைவிட இதில் ஜூனியர்-சீனியர் வேற்றுமை முற்றிலுமாக களைந்துவிட்டதை உணர்ந்தோம்.

நிகழ்ச்சியில் சிறப்பாக பங்கேற்கும் மாணவர்களில் சிலரை “புதிய தலைமுறை ஆர்,ஜே”வாக தேர்வு செய்து ஒரு மணி நேரம் ஹலோ எஃப்.எம்.மின் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வாய்ப்பு தர இருக்கிறார்கள். நிகழ்ச்சியின் முடிவில் வெற்றி பெற்ற பதினொறு மாணவர்களுக்கும் ஒரு அழகிய மொபைல் ஃபோன் பரிசினை ஐடியா மொபைல் திருச்சியின் நிர்வாகி, புதிய தலைமுறை திருச்சியின் சர்குலேஷன் மானேஜர், ஈ.வெ.ரா.கல்லூரி முதல்வர் ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர். பரிசு பெற்றதைவிட, இது போன்ற நிகழ்ச்சி மூலம் தங்கள் திறமைகளுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பிற்கே நன்றி தெரிவித்தனர் மாணவர்கள். பின்னர் நிகழ்வில் கலந்துகொண்ட அத்தனை மாணவர்களுக்கும் புதிய தலைமுறை இதழ் வழங்கப்பட்டது.

நிறைவாக ஈ.வெ.ரா. கல்லூரியின் சீனியர்-ஜூனியரிடையே இருந்த இருக்கத்தையும், தயக்கத்தையும் நீக்கிவிட்ட மன நிறைவோடு விடைபெற்றோம். தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலும் தொடரும் இந்த கல்லூரிச்சாலையின் பயணத்தை, சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லாமல், நெகிழ்வோடு மாணவர்கள் மனதில் பதிவிப்பதில் பெருமைப் படுகிறது புதிய தலைமுறை. இதை வெற்றி நிகழ்வாக மாற்றிவரும் மாணவர்களுக்கும், நிகழ்ச்சியின் மற்ற விளம்பரதாரர்களுக்கும், நிகழ்ச்சி நடத்துனர்களான ரேடியோ ஹலோவிற்கும் புதிய தலைமுறையின் நன்றிகள்.

Monday, August 2, 2010

”கல்லூரிச் சாலை!..கவனம் தேவை!..” ஸ்கூலேஜ் To காலேஜ் டிப்ஸ்…

தினமும் கலர் டிரஸ், படிப்புல இருக்காது ஸ்டிரஸ், செல்போன் சாட்டிங், வாரமொருமுறை டேட்டிங், கன்னா பின்னா ஊர் சுத்தல், காதில் வாங்காத பெற்றோரின் பிணாத்தல் – இதுதான் கல்லூரி வாழ்க்கை என்று கலர் கனவுகளோடு பள்ளி முடித்து கல்லூரிக்குள் அடியெடுத்து வைப்பவர் நீங்களென்றால், உங்களுக்கு இந்தக் கட்டுரை ஒரு அதிர்ச்சி வைத்தியம்தான். மேலே சொன்னதெல்லாம் உண்மையில் மாயை, கல்லூரி வழக்கில் சொன்னால் அம்புட்டும் பீலாதான். நிதர்சனமாக பார்த்தோமேயானால் கல்லூரி வாழ்க்கை என்பது, எஞ்சிய உங்கள் வாழ்வின் தலையெழுத்தை இன்றே கண் முன் காட்டும் ஒரு ஆக்டோபஸ் ஆருடம் போன்றதுதான். ரொம்பவே கவனமா இருக்க வேண்டிய இந்த பருவத்தில் நீங்கள் எவற்றை எவ்வாறு சமாளிக்கலாம் என்னும் அசால்ட் அணுகுமுறைகளை இங்கே தொகுக்கிறோம். காலேஜ் மாணவராகப்போகும் நீங்கள் முதலில் சமாளிக்க வேண்டிய சவால் சீனியர்களுக்கு போட வேண்டிய சலாமாகத்தான் இருக்கும். எவன்டா கண்டுபிடிச்சான் இந்த ரேகிங்க? என்று எரிச்சல் வரும் அளவுக்கு கடுப்பேத்துவார்கள். ஊரிலுள்ள அத்தனை கோயிலுக்கும் நேந்து கொண்டு நீங்கள் சபித்துக் கொட்டும் அதே சீனியர்தான் உங்களுக்கு அடுத்தடுத்த வருடங்களில் படிப்பிலும், இன்ன பிறவற்றிலும் உதவியாய் இருப்பார் என்பது மறுக்கவே முடியாத உண்மை. ஒரு அளவைத் தாண்டினால் ரேகிங் கடும் தண்டனைக்குரியது என்பதால் எல்லாவற்றையும் பொறுத்து கொண்டிருக்கவும் வேண்டாம். ரேகிங் பற்றி ஒரு அனுபவஸ்தரை தேடிப்பிடித்து கருத்து கேட்டோம். “நான் இப்போ ஃபைனல் இயர் படிக்குறேன். ஃபர்ஸ்ட் இயர்ல எனக்கு கடும் தலைவலியாயிருந்த ராகிங் செகண்ட் இயர்ல என்னவோ ரொம்ப அழகாவும் அர்த்தமுள்ளதாவும் தெரிஞ்சுது. ஆனா இன்னைக்கு ராகிங் எனும் பேருல லிமிட்ட கிராஸ் பண்றாங்க. அந்த மாதிரி நேரத்துல மன உளைச்சல் அடைவதோ, தற்கொலைக்கு முயல்வதோ டோட்டல் வேஸ்ட். யாருக்காகவோ நீங்க ஏன் உயிர விடணும். கல்லூரின்னு வந்துட்டாலே முதல்ல நமக்கு இருக்க வேண்டியது தைரியம்தான். தைரியமா எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணுங்க” என்று ராகிங் பற்றி பி.ஹெச்.டி. முடித்த ரேஞ்சில் சொல்லிவிட்டுப் போனார் இஞ்சினியரிங் மாணவரான பிரபு. சரி ராகிங்கை கடந்துவிட்டோம், அடுத்து? என்றுமே நம் கண்களுக்கு எதிரிகளாகத் தெரியும் பேராசிரியர்கள். உங்கள் கல்லூரியின் அத்தனைப் பேராசிரியர்களிடமும் நீங்கள் நல்லப் பெயர் வாங்கிவிட்டீர்களேயானால் உங்களுக்கு சைக்காலஜி டிகிரியை படிக்காமலேயே கொடுக்கலாம். காரணம் அவர்களை சமாளிப்பதற்கும் ஒரு தனி தகுதி வேண்டும். ஒவ்வொருவரும் ஒரு விதமாக இருந்தாலும் அவர்களிடம் இருக்கும் மைனஸ்களை ஒதுக்கிவிட்டு பிளஸ்பாயிண்டை மட்டும் பார்த்து ஏற்றீர்களேயானால் வெற்றி நிச்சயம். ஒரு ஆசிரியரை பிடித்திருந்தால் மட்டுமே அவர்களது பாடங்களிலும் ஆர்வம் வரும் என்பது அரிச்சந்திரன் மீது ஆணையாக உண்மையே. இதைப்பற்றி ஒரு படிப்புப் புழுவிடம் கேட்டபோது, “பொதுவா ஸ்கூல் மாதிரி இங்க யாரும் படிக்க சொல்லி ஃபோர்ஸ் பண்ண மாட்டாங்க. ஆனா இண்டெர்னல் மார்க் அப்புடிங்கிற ஏகே47 அவங்க கையில இருக்குறவரைக்கும் நாம கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கணும். பொதுவா எந்த வாத்தியாரும் உங்ககிட்ட மரியாதையத் தவிர எதையும் எதிர்பார்க்கமாட்டாங்க. அந்த மரியாதைய கொடுக்குறதால நமக்கு எந்த நஷ்டமும் கிடையாது. அதே சமயம் உங்களோட சுய மரியாதைக்கான காப்பீடும் ஆசிரியர்களிடம் உண்டு. அது நீங்க நடந்துக்குற விதத்துலதான் இருக்கு. அமைதியா ஆட்டம் போட்டா பிரச்சினையேயில்ல. அளவுக்கு அதிகமா அளப்பறைய கொடுத்தா ஆப்பு கன்ஃபார்ம். பார்த்து நடந்துக்கோங்க” என்று அட்வைஸ் அருவியாய் பொளந்துகட்டினார் கல்லூரி மாணவரான ராமச்சந்திரன். அடுத்து ரொம்ப முக்கியமான கல்வி பக்கம் போவோமா? நீங்கள் எதிர்பார்ப்பதைப் போல் பள்ளி மாதிரி உங்களைப் படிக்கச்சொல்ல ஆள் இருக்கமாட்டார்கள்தான். அதே சமயம் பள்ளியைப்போல் தனி கவனத்தோடு சொல்லித்தருவதிலும் ஆள் தட்டுப்பாடு கல்லூரிகளில் உண்டு. நீங்கள்தான் உங்களுக்கு வழிகாட்டி. பள்ளியில் கிடைத்ததைவிட இனி நிறைய நேரம் இருக்கப்போகிறது. அதை எப்படி உபயோகிக்கப் போகிறீர்கள் என்பதில்தான் வெற்றிக்கான சூச்சுமம் இருக்கிறது. இது பற்றி ஒரு பேராசிரியரிடமே கேட்டோம். “காலேஜ் வந்துட்டா படிக்கவே வேணாம். பாஸ் ஆனா போதுங்கிற மாதிரியான ஒரு மனப்போக்கு தமிழ் சினிமா பார்த்து பார்த்தே நம்ம மாணவர்கள் மனசுல ஆளப் பதிஞ்சிருக்கு. ஆனா இதுவரை நீங்க படிச்சது உங்க கல்வி மேம்பாட்டுக்குத்தான். இனி நீங்க கல்லூரியில படிக்கிறதுதான் வாழ்க்கை மேம்பாட்டுக்குங்கிறத புரிஞ்சுக்கோங்க. நிறைய படிக்க வேணாம். நிறைவா படிச்சாப் போதும். தமிழ் மீடியம் முடித்த மாணவர்கள் எந்த வகையிலயும் உங்கள நீங்களே ஒரு தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாக்கிக்காதீங்க. உண்மையில இன்னைக்கு கம்பெனி அரியாசனத்துல நுனி நாக்கு இங்கிலீஸ் பேசுற பலரும் தமிழ் மீடிய மாணவர்கள்தான். இன்னும் நிறைய கத்துக்கணும்கிற ஆர்வம்தான் ரொம்ப முக்கியம். புரிஞ்சு படிங்க. திட்டமிட்டுப் படிங்க. அது போதும். வெற்றி உண்டு எக்ஸாம்லயும், வாழ்க்கையிலயும்” என்று ஊக்கம்கொடுக்கிறார் கம்ப்யூட்டர் பேராசிரியரான ரமேஷ். படிப்பிற்கு அப்பாற்பட்ட பல விஷயங்களும் நீங்கள் சந்திக்க வேண்டி வரும். இந்த பருவ மாற்றம் உங்களை வளரவிடாமல் செய்ய கோடி இன்னல்களை கொண்டு வரும். நீங்கள் இந்த ரிஸ்கையெல்லாம் ரஸ்க் போல் நொருக்கித் தள்ள வேண்டும். 1->”மச்சான் ஒரு தம் அடிப்போமா?” 2->“உனக்கு என்ன பைத்தியமா,இதென்ன புது பழக்கம்? ஆளவிடுடா சாமி” 1->“உனக்கு வேணாம்னா போ..” சில நிமிடங்களுக்குப் பின்..1->”மச்சான் ஒரே ஒரு பஃப் டிரை பண்ணுடா” 2->“வேணாம்டா வீட்டுக்குத் தெரிஞ்சா கொன்னே போட்டுடுவாங்க..” சில நொடிகளில் 1->“மச்சான் கடைசியா கேக்குறேன், ஒரு பஃப் நீ இழுக்குறது எப்புடிடா வீட்டுக்குத் தெரியும்?” 2->“அதுக்கில்ல.. அது வந்து… சரி குடுடா..” இப்படித்தான் விதி நம் மூளைக்குள் கபடி விளையாடுகிறது. ”வேண்டாம்” என்கிற ஒற்றைச் சொல்லை வைத்து நீங்கள் இது போன்ற விளையாட்டுகளில் ஈஸியாக ஜகா வாங்கலாம். அந்த வேண்டாம் என்கிற சொல்லின் ஆயுள் நீட்டிப்பைப் பொறுத்தே உங்கள் முடிவிலிருக்கும் தெளிவு தெரியும். ஒரு முறை வேண்டாம் என்று சொல்லிவிட்டால் அது எப்பேற்பட்ட சுகத்தைக் கொடுத்தாலும் வேண்டாம் என்று தீர்க்கமாக இருங்கள். இது புகை மட்டுமல்லாது இந்த வகையறாவிலிருக்கும் அத்தனை தொற்று கெட்டப் பழக்கங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும். இதைப் பற்றி நேரு எனும் மாணவர் சொல்லும்போது, “ஒரு புது படத்துக்கு போகணும்னு முடிவு செஞ்சுட்டா, பிளாக்லயாவது டிக்கெட் எடுத்து பாக்குறோமில்லையா? அதுல இருக்குற ஒரு பிடிப்பை கெட்ட பழக்கங்களை ஒதுக்குறதுல காட்டுனா நிச்சயமா தப்பிச்சுடலாம்” என்று டிப்ஸ் கொடுக்கிறார். எல்லாவற்றையும்விட ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. உங்களுடைய பெற்றோரை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் அது. மாணவர் ராம்குமார் இதைப் பற்றி சொல்லும்போது, “காலேஜ் சேர்ந்தபிறகு நீங்க அவங்கள எதிர்த்து பேசுனாலே, “கிளிக்கு ரெக்க முளைச்சிடுத்து..” என்றுதான் சொல்வார்கள். எந்தத் தருணத்திலும் உங்க பெற்றோர் மேல கோபப்படாதீங்க. ஊருல யாராரோ திட்டும்போது நமக்கு இருக்குற பொருமை அப்பா அம்மா பேசுறப்ப மட்டும் ஏன் இருக்குறதில்ல? பொதுவா உங்களோட பிரச்சினைகள உட்கார்ந்து பேசுங்க. ப்ளீஸ்! உங்க பெற்றோர்-பிள்ளை உறவுக்குள்ள இருக்குற பாச பரிமாற்றமெல்லாம் நீங்க மனசுவிட்டு பேசுனா மட்டும்தான் தெரியும்” என்று செண்டிமெண்டாக ஆஃப் செய்தார். இதையும் தாண்டி புனிதமானது எனும் பெயரில் ஒரு நோய் கல்லூரியில் வரும். மிக மோசமான அந்த நோயின் பெயர் “காதல்”. இதைப்பற்றி எத்தனை பக்கங்கள் எழுதினாலும் பலருக்கும் புழப்படாது, காரணம் காதலுக்குத்தான் கண்,காது,மூக்கு என்று எதுவுமே கிடையாதே? ”இதைப்பற்றிய ஒரு ஒன்லைன் மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். சரியான சமயத்தில், நீங்கள் யாரையும் சாராத நிலையில், உங்களை சார்ந்து யாரும் இல்லாத சூழலில் மட்டும் காதல் செய்யுங்கள்” என்று பஞ்ச் அடித்தார் இதுவரை நோய் தாக்கப்படாத மாணவரான ஸ்டாலின். மேலே சொன்ன அத்தனையுமே கல்லூரி எனும் ஒரே கூரையில் நீங்கள் சந்திக்கப்போகும் பல்வேறு ஏழரைகள். இவை அனைத்தையும் கவனத்தோடு கடந்து வாழ்வின் வெற்றியை மட்டுமே நோக்கி நடக்கத் துணிந்துவிட்டீர்களேயானால், சபாஷ். நீங்கள் அனைவருமே ஏழரையை நொறுக்கி காலரைத் தூக்கி வெற்றியடைய புதிய தலைமுறை வாழ்த்தி கல்லூரிக்கு வழியனுப்புகிறது.