வறுமையை வென்றவர், இன்று வாழ்க்கை கொடுக்கிறார்
திருச்சி காவேரி ஆற்றுப்பாலம். விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் ஒருவர். ஆம்புலன்ஸ் வெகு நேரமாகியும் வரவில்லை. புகார் காவல்துறைக்கு போகவில்லை. மாறாக ஒரு எஃப்.எம். நிகழ்ச்சிக்கு வருகிறது அழைப்பு. நிகழ்ச்சிக்கு நடுவே திடீரென்று பாடலை நிறுத்திவிட்டு அறிவிப்பாளர் இந்த செய்தியை வெளியிடுகிறார். அடுத்த சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் ஸ்பாட்டிற்கு விரைகிறது. ஒரு உயிரும் காப்பாற்றப்பட்டுவிட்டது. அடுத்த சில நிமிடங்களில் இந்த செய்தியும் காற்றில் தவள நேயர்களுக்கு பதட்டம் தனிந்தது. அறிவிப்பாளர் ஆம்புலன்ஸ் டிரைவருக்கு நன்றி சொல்ல, திருச்சிவாசிகளோ பங்காளிக்கு நன்றி சொன்னார்கள். ”யார் இந்தப் பங்காளி?” விசாரித்தோம். பேரைக் கேட்டாலே திருச்சியே குதூகலப்படும் இந்தப் பங்காளி, ரேடியோ ஹலோவின் ஆர்.ஜே.வான ராஜா தான். ராஜா தொகுத்து வழங்கும் “பல்லாங்குழி” விளையாட்டு நிகழ்ச்சியின்போது நடந்த நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வுதான் நாம் மேலே குறிப்பிட்டது. விளையாட்டான ஒரு நிகழ்ச்சியை சமூக அக்கறையோடு கையாளும் இவர் தனது வாழ்க்கையை மூட்டை தூக்கி ஆரம்பித்து, இன்று ஆயிரக்கணக்கில் காசை அள்ளும் ஆர்.ஜே.வாகியிருக்கிறார். இவரது சுறு சுறு வாழ்க்கைப் பயணத்தை இவரை வைத்தே ரீவைண்ட் செய்தோம். அது ஒரு காலம் அழகிய காலம் என்கிற ரீதியில் ஆரம்பித்தவர், “என்னுடையக் குடும்பம் சராசரியான மிடில்கிளாஸ்தான். சின்ன வயசுல இருந்தே இதுதான் பாதை அப்புடின்னு இல்லாம எனக்கு அமையுற வழிகள்லதான் பயணப்பட்டிருக்கேன். ஆனா ஒரு சில நேரங்கள்ல நான் சில சரியான முடிவுகள் எடுத்ததாலதான் இன்னைக்கு இருக்குற இந்த நிலைமைக்கு வந்திருக்கேன். அநேகமாக இந்நேரத்துக்கு திருப்பூர்ல ஏதோ ஒரு பனியன் கம்பெனியில பல கஷ்டங்களுக்கு அப்புறம் ஒரு சூப்பர்வைசரா ஆகியிருப்பேன்னு நினைக்குறேன். எங்கேயோ நூல் கோர்க்குற ஆலையில இருக்கவேண்டிய ராஜா, இன்னைக்கு ஊரே உற்று நோக்குற ஒரு துறையில இருக்கேன்னா…” – அதுக்கு இப்படி பட படன்னு இவர் பேசுறதுதான் காரணம்னு மனசுல நினைச்சுக்கிட்டோம். பிளஸ்டூ-வில் இவரது மதிப்பெண் மிக சிறப்பாகவே அமைந்தது. ஆனால் இவரது குடும்ப சூழ்நிலை சற்றே விளையாடியது. அதுவரை வறுமை தெரியாமல் செல்லமாய் பெற்றோர் வளர்த்தாலும், அவர்களால் இஞ்சினியரிங் படிக்க வைக்க முடியாத நிலையை புரிந்துகொண்ட இவர், எப்படியும் ஒரு ஆசிரியர் ஆகிவிடலாம் என்கிற எண்ணத்தில் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்திருக்கிறார். பல சமயங்களில் தீபாவளி, பொங்கலுக்குக்கூட துணி எடுக்க முடியாத நிலை இருந்துள்ளதாம். இதனாலேயே காலேஜ் வாழ்க்கைக்குப் பிறகு இவர் பண்டிகைகளைக் கொண்டாடுவதே இல்லை. “காலேஜ் படிக்கும்போது எப்படியும் நாம எங்காவது கவர்மெண்ட் வேலையில சேர்ந்து காலாட்டிகிட்டே சம்பாதிக்கலாம் என்று சொகுசு கனவு கண்டேன். ஆனா அத முடிக்கும்போது ஒரு வெறும தாக்குனுச்சு. என்னுடைய தாத்தாவோட கிளாஸ்மேட்லாம் எம்பிளாய்மெண்ட் ஆபிஸ்ல வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்குற விஷயம் பிறகுதான் தெரிஞ்சுது. ரைட், கவர்மெண்ட் கனவு கந்தல். அடுத்தது, பிரைவேட்லயாவது ஏதாவது? ம்ஹூம். இதுக்கு மேலேயும் வீட்ட நம்பியிருந்தா அசிங்கம்னு முடிவு எடுத்து, யூசுவல் பட்டதாரிகளோட சாய்ஸான ஏதோ ஒரு வேலைங்கிற கான்செப்ட்ல வேலை தேடினேன். அப்போ ஒரு பிரெண்ட் சொன்னதால திருப்பூர் பனியன் கம்பெனியில வேலைக்கு சேர்ந்தேன். என் வாழ்க்கையோட ரொம்ப சிரமமான காலம் அதுதான். ஆனா, என் புள்ள பெரிய சூப்பர்வைசரா வேல செய்யுறான். அவன் இல்லனா அந்த கம்பெனியில ஒரு துறும்புகூட நகராது என்கிற ரேஞ்சில் என் அம்மா பேசுற மாதிரி வீட்டுல கவுரவமா புழுகியிருந்தேன். திருப்பூரில் முதல் நாள் வேலை முடித்தபோது, எனக்கு அடைக்கலம் தந்தது ஒரு பிளாட்பார்ம் தான். ஒரு சமயம் அதே கம்பெனியில் மூட்டையும் தூக்கியிருக்கேன். தூங்குறதுக்கு சரியான இடமில்லாம லோடு மூட்டைகள் மேல தூங்கியிருக்கேன்.” என்று சொல்லி தனது சோதனைக்காலத்திற்கு ஒரு கமர்சியல் இடைவேளை விட்டார் ராஜா. திருப்பூரிலிருந்து திருச்சிக்கு எப்புடி? “திருப்பூர்ல வேலை செய்யும்போது இது எனக்கான வேலை இல்லங்கிற உள்ளுணர்வு மட்டும் அடிக்கடி இருந்ததுண்டு. பல நேரங்கள்ல என்னத்த படிச்சு கிழிச்சோம்னு நம்ம கல்வித் திட்டத்தின் மேல கோபப்பட்டதுண்டு. ஆனா வாழ்க்கையோட இன்னொரு பரிமாணத்த எனக்கு அடையாளம் காட்டுனது திருப்பூர்தான். அதனாலேயே ரொம்ப சீக்கிரத்துல வெளிய வந்துட்டேன். பிறகு ஒரு சில வேலைகள் செஞ்சு, கடைசியா தெரிஞ்ச நண்பர் மூலமா திருச்சில இருக்குற ஒரு ஸ்கூல்ல கல்சுரல் இன்சார்ஜா சேர்ந்தேன். கடைசிவரை வாத்தியார் வேலை எதுவும் செய்யல. அங்கேயும் அந்த பசங்கள கலைப்போட்டிகளுக்கு தயார் படுத்துறதுதான் என் வேலை. எவ்ளோதான் படிச்சிருந்தாலும் எனக்கு கடைசியா சோறு போட்டது என்னவோ நான் சிறு வயசுல இருந்து கலந்துகிட்ட கலைப்போட்டிகளுக்கான சான்றிதழ்கள்தான். இதுதான் என் வழின்னு முடிவாகிடுச்சு” என்று படபடக்கும் பங்காளி ராஜா, தனது கவிதைத் திறமையைக் காட்டி ஒரு பிரபல திரைப்பட இயக்குனரை கவர்ந்துள்ளார். இவரது கவிதையை சென்னையில் ஒரு எஃப்.எம். பேட்டியின்போது அவர் சொல்லியிருக்கிறார். இதை ராஜா தனது தாயோடு பகிர்ந்துகொண்டபோது, “உன் கவிதை எஃப்.எம்.க்கு போயிடுச்சு. நீயும் போகலாமேப்பா” என்று சொல்லியிருக்கிறார். தாய் சொல்லைத் தட்டாத ராஜா, ஹலோ எப்.எம். திருச்சியில் ஆட்கள் தேர்வு நடத்தியபோது, ஆயிரக்கணக்கில் குவிந்த போட்டியாளர்களில் தனித்துவம் பெற்ற ஒருவராக தேர்வானார். திருச்சிக்கு பங்காளி கிடைச்சு இரண்டு வருஷமாச்சு. எப்புடி இருக்கு இந்த வேலை? ”உண்மையில ரொம்ப மனநிறைவோட இருக்கேன். இந்த வேலையில கிடைக்கிற பணத்தைவிட, பேருதான் ரொம்ப அதிகம். இன்னைக்கு எல்லோருமே என்ன அவங்க வீட்டுப் பையனா ஏத்துக்கிட்டிருக்காங்க. ரொம்ப எமோஷ்னலா என் மேல பாசம் வைக்குறாங்க.” அதெல்லாம் இருக்கட்டும் சார். இந்த வேலை நிரந்தரமில்லங்கிற ஒரு எண்ணம் பலருக்கும் இருக்கே. இதப்பத்தி?.. “இத வேலையா மட்டும் பார்க்காம பலரோட சங்கடங்களை மறக்கவச்சு, சிரிக்கவைக்குற , ரசிக்கவைக்குற ஒரு சேவையாதான் பார்க்கணும். நிச்சயமா தெறம இருக்குறவங்க ஒரு கவர்மெண்ட் ஆபிஸரவிட ரொம்ப நிரந்தரமா இந்தத்துறையில செட்டிலாக முடியும். இதுலயும் பிரமோஷன் உண்டு. இன்கிரீமெண்ட் உண்டு. எல்லாத்தையும்விட எந்தத் துறையிலயும் கிடைக்காத பேரும், புகழும் இதுல மட்டும்தான் கிடைக்கும்.” என்று சொல்லி அசரவைத்தார். வேலையையே சேவையாகக் கருதும் ராஜாவுக்கு, ஒரு சேவை முகமும் இருக்கிறது. கிராமப்புற மாணவர்கள் பலருக்கு சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக உதவுகிறார். இந்தியா முழுவதும் இருந்து பல அகாடெமிக்கலிலிருந்து புத்தகங்களைப் பெற்று இந்த மாணவர்களுக்குத் தருகிறார். மேலும் இவர்களுக்கான ஆங்கில அறிவையும் வளர்க்க உதவுகிறார். கிராமத்திலிருந்து நகரம் வந்து ஆங்கிலம் பேச முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்காக இலவசமாக ஒரு பயிற்சி மையம் அமைப்பதே இவரது லட்சியமாம். இவர் தொகுக்கும் நிகழ்ச்சியின்போது திருச்சியின் அடிப்படைப் பிரச்சினைகளை அவ்வபோது விவாதிக்கிறார். பல அதிகாரிகளும் இவரது நிகழ்ச்சியைத் தொடர்ந்து கேட்பதால், பல பிரச்சினைகளும் மாநகராட்சியால் தீர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ”ஏதாவது நிகழ்வுகள் உங்களை பெருமைப்பட வைத்ததுண்டா?” “நிச்சயமா.. ஒரு முறை ஒரு பார்வையற்ற பெண் ஸ்டூடியோவுக்கு வந்தாங்க. என்னோட கைய தொட்டதுமே சந்தோஷத்துல பயங்கரமா அழுதாங்க. அதுக்கப்புறம் ரொம்ப நேரம் என்கிட்ட பேசிட்டு போனாங்க. இது முகம் தெரியாதத் துறைங்கிறதால, பல நேரங்கள்ல என் முன்னாடியே என் ஷோவப்பத்தி திட்டினவங்களுமுண்டு, பாராட்டினவங்களுமுண்டு” என்று சொல்லி பிளாஸ்பேக்குக்கு ஃபுல்ஸ்டாப் வைத்தார் ராஜா. “புதிய தலைமுறையினருக்கு என்ன சொல்றீங்க?” “பெற்றோர்கள் குழந்தைகளோட கல்வியல்லாத திறமைகளையும் ஊக்கப்படுத்துங்க. என்கூட படிச்சவங்கள்ல ஒரு சிலர் ரொம்ப கஷ்டப்படுறாங்க. அவங்களவிட நான் இருபது மடங்கு அதிகமா சம்பாதிக்கிறேன்னா அதுக்குக் காரணம், எனக்குள்ள இருந்த உள்வளத் திறமைதான். ஆனா இப்போதெல்லாம் ஆண்டு விழா மட்டும்தான் திறமையை காண்பிக்க ஒரே களம் என்கிற நிலை உள்ளது. பாடங்களுக்கு இருப்பது போல திறமைகளுக்கும் ஒரு தனி வகுப்பே நடத்தவேண்டும் என்பதே என் ஆசை. என் வெற்றிக்குக் காரணமான ஒருவொருத்தருக்கும் என்னோட நன்றிகள்” என்று சொல்லும் ராஜா திருச்சியின் ஒவ்வொரு வீட்டிலும் பாசத்தை பங்குபோட்டுக் கொண்டிருக்கிறார், “பாசக்காரப் பங்காளியாக..” நீங்களும் கிராமப்புறத்திலிருந்து சிவில் சர்வீஸ் எழுத விரும்புபவரா? உதவிக்கு – attitude.vel@gmail.com