Saturday, September 25, 2010

"புதிய தலைமுறையுடனான பயணம்”


ஒரு நாள் பத்திரிக்கையாளரானால்….” – இப்புடி Add Imageமுதல்வன் பட கான்செப்ட்ல நான் எழுதி அனுப்புன ஒரு கட்டுரைதான் தகுதி சுற்றுல என்னை தேர்வாக வச்சுது. ஒரே ஒரு நாள் பத்திரிக்கையாளரானால், எனக்குள்ள ஏற்படப்போகும் மாற்றத்தைதான் எழுதியிருந்தேன். ஆனா இந்தா வச்சுக்கோன்னு ஒரு வருஷத்துக்கு எனக்கு பயிற்சி நிருபராக வாய்ப்பு கொடுத்தது ஒரு ஜாக்பாட் அடிச்ச ஃபீல கொடுத்துச்சு. பிரஸ் அப்புடின்னு அச்சடிச்ச அந்த ஐடெண்டி கார்ட் நம்மகிட்ட இருக்குறதுல எவ்ளோ பெருமை? உண்மையிலேயே புதிய தலைமுறை டீம்ல சேர்வதற்கு முன்னாலேயே நான் ரொம்ப தீவிரமான வாசகனாத்தான் இருந்தேன். காசு வாங்காத ஒரு பிராண்ட் அம்பாசிடர் ரேஞ்சுக்கு வேலை செஞ்சேன். அப்படியிருந்த நேரத்துல, “வீடு தேடி வரும் புத்தக சேவை” அப்புடிங்கிற என்னோட முதல் கட்டுரை, என்னோட பெயரோட வெளிவரும்போது இருந்த சந்தோஷத்த வார்த்தையில சொல்லிடமுடியாது. ஆனா இன்னைக்கு அந்த கட்டுரை நடைய படிச்சு பார்த்தா எனக்கே சிப்பு சிப்பா வரும். அவ்ளோ மொக்கையாத் தெரியுற அந்த நடையிலயிருந்து இன்னைக்கு எழுதுற சுமாரான கட்டுரை நடைக்கு முன்னேறியிருக்கேன்னா, இங்க என்னை செதுக்கிய ஆசிரியர்கள்தான் அதுக்குக் காரணம். புதிய தலைமுறையோட இந்த ஒரு வருஷப் பயணத்துல, இதுவரையே எக்கச்சக்கமா தெரிஞ்சுகிட்டிருக்கேன். என்னோட கனவுலகமான ஊடகத்துறையில நான் அடியெடுத்து வைக்க வாய்ப்பிருக்குன்னு தினம் தினம் எனக்கு நம்பிக்கைக் கொடுக்குறதே நம்ம பத்திரிக்கைதான். நெறைய நல்ல மனிதர்களோட தொடர்பு, பல மாற்றுத்திறனாளிகளோட உழைப்பு, எங்க போனாலும் பத்திரிக்கை பத்தின ஒரு பாசிட்டிவ்வான பின்னூட்டம்னு கெடைச்ச மதிப்பும் மரியாதையும் என் லெவலுக்கு கொஞ்சம் அதிகம்தானோனுகூட தோணுச்சு. ஒரு மாணவனா மட்டுமே இருந்த என்னை என் வட்டத்துல ஒரு மினி செலப்ரிட்டி ஆக்கியது நம் பத்திரிக்கை. நான் எழுதின ”கனா காணும் பட்டதாரிகள்” கட்டுரையின் எதிரொலியா மெட்ராஸ் யுனிவர்சிட்டியில 150 வருஷமா நடக்காம இருந்த பட்டமளிப்பு விழா இனி நடத்தப்படும்னு அறிவிப்பு வந்துச்சு. அந்த யுனிவர்சிட்டி மாணவர்கள் நமக்கு நன்றி சொன்னதையும் மறுபடியும் பதிவு செஞ்சோம். சக்தி கார்ஸ் சக்திவேல், ஆர்.ஜே. பங்காளி ராஜா, ஞானபாரதி, பெட்ரிஷியா, மித்ரா,சிவராமன், இன்னும் எத்தனையோ பேரு என்னோட கட்டுரைகள்ல முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்காங்க. வெங்கட்ராமன், சி.எம்.சி.குரு, ராஜா, இவங்க எல்லாம் என்னோட முன்னேற்றத்துல மிக முக்கியப் பங்கு வகிக்குறவங்க. இந்த சந்தோஷமான தருணத்துல அவங்களுக்கெல்லாம் நான் ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கேன். பெயர் சொன்னால் ரெண்டு ஸ்பெஷல் மலரே வெளியிடலாம். எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த நம்ம “புதிய தலைமுறை”க்கும், உறுதுணையாயிருந்த என் பெற்றோர், நண்பர்கள், மற்றும் எல்லாருக்கும் மனமார்ந்த நன்றிகள். இப்போதே புதிதாய் பிறந்திருக்கும் புதிய தலைமுறைக்கு முதலாமாண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களும்.....வணக்கங்களும்...

”ஆசிரியர் பணி கத்திமுனைப் பயணம்” கல்விக்கண் திறக்கும் சிவராமன்


ஆசிரியர்கள் இரண்டு ரகம். “இவர் கிளாஸா? பிச்சிக்கிட்டு ஓடுங்கடா..” இது ஒரு ரகம். “ இவர் கிளாஸ் மச்சி. கவனிச்சுட்டுப் போவோம், வா” இது மற்றொரு ரகம். நம் சிவராமன் சார் இதில் இரண்டாம் ரகம். இவரது கிளாஸ் என்றால் அக்கம் பக்கத்து டிபார்ட்மெண்ட் மாணவர்கள்கூட ஆர்வத்தோடு வந்து அமர்ந்து கவனிப்பார்களாம். அத்தனை சுவாரஸ்யமாக பாடம் நடத்தும் இவர், கண் பார்வை குறைவுள்ள ஒரு மாற்றுத்திறனாளி என்பதுதான் வலிமையான ஹைலைட்.

தற்போது பிரெஸிடென்ஸி காலேஜில் ஆங்கிலத் துறையில் பணியாற்றி வரும் இவரை ஒரு இடைவேளையில் சந்தித்தோம். “என்னோட சொந்த ஊர், திருச்சி. அங்க, நான் மூன்றாம் வகுப்புப் படிக்கும்வரை எனக்குக் கண்பார்வை நல்லாத்தான் இருந்துச்சு. ஒரு விபத்துல என்னோட பார்வைய இழக்க நேரிட்டுது. தொடர்ந்து கொஞ்ச வருத்தம், நிறைய நம்பிக்கையோட, அரசு பார்வையற்றோர் பள்ளியிலேயே ஆறாம் வகுப்புவரை படிச்சேன். அப்புறம் அப்பாவுக்கு சென்னை டிரான்ஸ்ஃபர் கிடைச்சுது. தொடர்ந்து இங்க, பணிரெண்டாம் வகுப்புவரைப் படிச்சேன். அதுக்கப்புறம் பி.ஏ. ஆங்கிலம், எம்.ஏ. ஆங்கிலம், பி.எட். ”என்று பட்டங்களை சாதாரணமாக அடுக்கிய இந்த தமிழ் மீடிய மாணவர் எம்.ஏ. ஆங்கிலத்தில் கோல்ட் மெடலிஸ்டாம்.

”படிப்பில் இருந்த ஆர்வம் ஓகே. ஆனா ஆசிரியராத்தான் ஆகணும்னு ஏன் முடிவு செஞ்சீங்க?”

”நான் ஆசிரியராக முடிவு செஞ்சதுக்கு ரெண்டு முக்கியமான காரணங்களுண்டு. என்னை ஒரு முழு மனிதனா உருவாக்கிய என்னுடைய ஆசிரியர் டாக்டர்.விஷ்ணு பட். தமிழ் மீடியம் பையனான எனக்கு ஊக்கம்ங்கிற டானிக்கை ஊத்தி எனர்ஜி குறையாமல் சாதிக்க வைத்தவர். தற்போது எனக்குப் பிறந்திருக்கும் இரட்டைக் குழந்தைகளில், முதல் ஆண் குழந்தைக்குக்கூட அவரது பெயர்தான் வைக்கப்போறேன்.அவ்ளோ நெருக்கம் என்னோட உள்ளத்துல அவருக்கு. அவர மாதிரி ஒரு ஆசிரியராகணும், பலருக்கும் உதவணும்ங்கிற எண்ணத்துலதான் ஆசிரியத் துறைய தேர்வு செஞ்சேன். அதுமட்டுமில்ல, கருத்தால் உழைக்கக்கூடிய துறை இது மட்டும்தாங்கிற என்னோட ஆள்மன பிரதிபலிப்பும் ஒரு காரணம்தான்” என்று தெளிவாக விளாக்கினார்.

”சாதாரணமான விழித்திறனுடைய மாணவர்கள் படிக்கிற கல்வியகங்கள்ல எப்புடி வேலைக்கு சேர்ந்தீங்க? கொஞ்சம் சிரமம்தானே?”

”நான் பி.எட். முடிச்ச கையோட ஒரு சி.பி.எஸ்.சி. ஸ்கூல்ல இண்டெர்வியூவுக்கு போயிருந்தேன். அவங்க எனக்கு உடனடியா வேலை கொடுக்கவும் முன் வரல. அதே சமயம், என்னை புறக்கணிக்கவும் மனசு வரல. அதனால எனக்கு ஒரு வாய்ப்புத் தரும் அடிப்படையில டிரெய்னியா நியமிக்குறதா சொன்னாங்க. மூணு மாசத்துக்கு அப்புறம் என்னோட பெர்ஃபாமன்ஸ் அடிப்படையில நிரந்தர வேலை தர்றதா உறுதியளிச்சாங்க. எனக்கு அப்போ தேவைப்பட்டது என்னை நானே நிரூபிக்குறதுக்கு ஒரே ஒரு வாய்ப்புதான். அது கிடைச்ச சந்தோஷத்துலயே பணியத்தொடங்கினேன்” என்று சொல்லும் இவர், முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்துக் காட்டுவதுபோல், ஒரு சில மாதங்களிலேயே தனது திறமையை நிரூபித்து, நிரந்தரமாகிவிட்டார்.

இந்த சாதனையாளரின் அடுத்த இலக்கு காலேஜ் பணிக்கானதாய் இருந்தது. இதற்கான யு.ஜி.சி.யின் நுழைவுத் தேர்வில் இந்தியாவிலேயே முதல் பத்து இடங்களுக்குள் பெற்று வியக்க வைத்தார். இவருக்கு ”ஜீனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்” எனப்படும் ஆராய்ச்சிக்கான ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. ஆராய்ச்சியா? வேலையா? என்றொரு சூழலில் குடும்ப சந்தர்ப்பங்களால், வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார். “முதன் முதலில் வேலூர் முத்துரங்கன் காலேஜ்ல வேலைக்கு சேர்ந்தேன். 2001ல் செங்கல்பட்டு ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ் காலேஜ்ல பணி செய்தேன். 2005ல இருந்து இதுவரை பிரெஸிடெண்ஸி காலேஜ்ல வேலையில இருக்கேன். என்னுடைய முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சிகள் இன்னும் மூணு மாதத்துல முடியப் போகுது” என்று தனது பயணப்பாதை குறித்த திடமான பார்வை கொண்டிருக்கிறார் சிவராமன்.

இவருக்கு ஒரு சேவை முகமும் உண்டு. பல்வேறு பார்வையற்றோர் அமைப்புகளில் தொடர்பு இருந்தாலும், “வெல்ஃபேர் அசோசியேஷன் ஃபார் பிளைண்டு” எனும் அமைப்பில் நேரடி செயலராகவும் பணிபுரிகிறார். “பார்வையற்றோர் பத்தின பொதுமக்களோட அறியாமைய நீக்குறதுதான் எங்களோட முதல் பணி. அரசு வேலையையும் தாண்டி பார்வையற்றோருக்கு தனியார் துறையிலும் வேலைபெறத் தேவையான தகுதிகளை வளர்க்க உதவி செய்கிறோம். கணிப்பொறி பயிற்சிக்கான பயிலரங்கங்கள் நடத்தி, டி.சி.எஸ். போன்ற கார்ப்பரேட்களிலும் வேலைவாய்ப்பை வளர்க்கிறோம்” என்று சொல்லும் இவர், மிகவும் கவுரவமான பதவியான ரெக்ரூட்மெண்ட் பேனல் மெம்பராகவும் டி.சி.எஸ்.ல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

”ஒரு ஆசிரியரா இருக்க நீங்க பெருமைப்படுற விஷயம் என்ன?”

”தனிப்பட்ட முறையில என்னோட மாணவர்கள் ஒவ்வொருத்தருடைய சாதனையும் என்னை பெருமைப்பட வச்சிருக்கு. உதாரணத்துக்கு திடீர்னு பார்வையை இழந்த ஒரு மாணவன், ஜெயக்குமார்னு பேரு. அவனுக்கு ஒரு வருஷம் பிரெய்லி முறைக் கல்விய சொல்லிக்குடுத்தேன். பின் சென்னை லயோலா காலேஜ்ல பி.ஏ. சேர்ந்த அந்த மாணவன், அங்க ஃபர்ஸ்ட் மார்க் வாங்குனான். எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு. இன்னொரு சந்தோஷமான விஷயம் நான் இப்போ பணிபுரியுற பிரெஸிடென்ஸி காலேஜ்ல தான் தமிழகத்துலயே அதிகமான பார்வையற்ற மாணவர்கள் படிக்குறாங்க. இங்க இருக்குற நூலகத்துல கிட்டத்தட்ட 30,000 புத்தகங்களையும் இ-புத்தகங்களா மாத்தி குடுத்திருக்கோம். ஒலி வடிவிலான புத்தகங்கள கொடுத்து மாணவர்களுக்கு உதவுறோம். இதெல்லாமே நான் ஒரு ஆசிரியரா இருப்பதாலதான் செய்ய முடியுது. அந்த வகையில இந்தப் பணிக்கு நான் பெருமைப்படுறதவிட அதிகமா கடமைப்பட்டிருக்கேன்னுதான் சொல்லணும்” என்று காலரைத் தூக்கிச் சொல்கிறார் சிவராமன்.

”மாணவர்- ஆசிரியர் உறவு எப்படி இருக்கணும்? இன்றைய கல்விச் சூழல் ஒரு மாணவனுக்கு ஏற்றதுதானா?”

` ”ஸ்கூல் லெவல்ல மாணவர்கள நமக்குக் கீழ் நடத்தி ஒரு பயம் கலந்த மரியாதையோட நெறிப்படுத்தணும். அதே சமயத்துல, காலேஜ்னு வந்துட்டா, பையனுக்கு தண்டனை கொடுத்துதான் திருத்தணும்னு நெனச்சா, முதல்ல இந்த எண்ணத்துல இருந்து திருந்தவேண்டியது நாமதான். அவன அவன் போக்குலயே போய் அவன நாம எப்புடி நடந்துக்க சொல்றோமோ அதுக்கு உதாரணமா, நாமே அப்புடி நடந்துக்கணும். ஆசிரியர் பணிங்கிறது ஒரு கத்தி முனை பயணம் மாதிரிதான். அதுல கவனத்தோட சுவாரஸ்யமாவும் பயணிக்கக் கத்துக்கணும். பசங்ககிட்ட பிரெண்ட்லியாத்தான் பழகணும். அதுக்குன்னு பிரெண்ட்லியா பழகுறேன் பேர்வழின்னு தப்பு செய்யக்கூடாது. ஒரு லிமிட்டோட அவன நெறிப்படுத்துனாலே காலகாலத்துக்கும் நம்மல மறக்கமாட்டான். இன்றைய கல்வி சூழல் ஓகேதான். ஆனா அரசியல் பத்துன ஒரு அறிவு மாணவர்களுக்கு ரொம்ப முக்கியம். அரசியல்னா தேர்தல்,கட்சிகள் மட்டுமில்ல. உலக அரசியல் ரொமப அவசியம். அதையும் சேர்த்து கொடுத்தா, மாணவர்களுக்கு இன்னும் ஏற்றதா இருக்கும்” என்று சொல்லும் இவரது வார்த்தைகளிலிருக்கும் உண்மையை உணர முடிந்தது.

”ஆசிரியர்களாகிய நாம் காணும் உலகங்கள் யார் காணக்கூடும்? மாணவர்களை முன்னேற்றப் போராடும் அத்தனை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்” என்று நிறைவாக ஒரு வாழ்த்து பஞ்ச் வைத்தார் நம்பிக்கை நாயகன் சிவராமன்.

பார்வைத்திறனற்ற மாணவர்கள், ஊக்கத்திற்கும் வழிகாட்டுதலுக்கும், தொடர்பிற்கு: 9952062427, sivaramanvvs@gmail.com

படங்கள்: பிரவீன் குமார், கண்ணன்